புலிகள் பாவித்த ஆயுதங்கள் மீட்பு-அம்பாறையில் சம்பவம்

தமிழீழ விடுதலைப்புலிகள் பாவித்தத்தாக சந்தேகிக்கப்படும் ஸ்னைப்பர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை சாகாமம் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் விரிவிற்குட்பட்ட கஞ்சிக்குடிச்சாறு பக்மிட்டியா காட்டுப்பகுதியில் திங்கட்கிழமை(29) மாலை அப்பகுதியில் உள்ள மரப்பொந்து ஒன்றில் நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
வழமை போன்று ரோந்து சென்ற விசேட அதிரடிப்படைக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய இத்தேடுதல் மேற்கொள்ளப்பட்டதுடன் மீட்கப்பட்ட ஆயுதங்கள் நீண்ட காலம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததனால் துருப்பிடித்திருப்பதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.
இதில் ஸ்னைப்பர் துப்பாக்கி -01 ஒரு தொலைநோக்கி -01 ரவைக்கூடு -01 தோட்டாக்கள் -07 உள்ளிட்ட ஆயுதங்கள் உள்ளடங்குவதுடன் தற்போது தமன பொலிஸ் நிலையத்தில் சட்ட நடவடிக்கைக்காக விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் ஆயுதங்கள் மீட்கப்பட்ட பகுதியில் கடந்த யுத்த காலங்களில் விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டு பிரதேசங்களாக அறிவித்து செயற்பட்டு வந்ததுடன் கெரில்லா போர் உத்தியை இவ்வாறான ஆயுதங்கள் ஊடாக வெளிப்படுத்தி வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




