இலங்கை தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படாமை தொடர்பில் இலங்கை முஸ்லிம் கவுன்சில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது.
கடந்த மாதம் முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தலைமையில் கலாநிதி கே. தவலிங்கம் மற்றும் ரோஹண புஷ்பகுமார ஆகியோர் அடங்கிய புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது.
எனினும், கடந்த காலங்களில் கலாநிதி எம். எச். ஹஸ்புல்லா, ஏ. எம். நாஹியா மற்றும் எம். ஐ. எம். அரசர்கான் போன்றோர் உறுப்பினர்களாகப் பணியாற்றிய போதிலும், இம்முறை முஸ்லிம் பிரதிநிதித்துவத்திற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என அக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த தவறு கவனக்குறைவால் ஏற்பட்டிருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ள முஸ்லிம் கவுன்சில், அரசியலமைப்பின் 95வது உறுப்புரையின்படி 5 உறுப்பினர்களை நியமிக்க வாய்ப்புள்ளதால், ஆரம்பக் கட்டத்திலேயே முஸ்லிம் பிரதிநிதி ஒருவரை நியமித்து நியாயமான மற்றும் சமத்துவமான ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யுமாறு ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டுள்ளது.

