குவைத் அரசு மானிய விலையில் குடிமக்களுக்கு வழங்கும் ரெஷன் பொருட்களை இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தல் செய்வதற்காக சேகரித்து கன்டெய்னர்களில் குவியல் குவியலாக மறைத்து வைத்திருந்ததை சுங்கத்துறை கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளது.
அவற்றை 40 அடி அளவுள்ள 6 கொள்கலன்களில் கடத்த முயன்றுள்ளனர். பல்வேறு கப்பல் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களிடமிருந்து இந்தக் கொள்கலன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஷுவைக் துறைமுகத்தில் ஏற்றுமதி நடைமுறைகள் நிறைவு செய்யப்பட்டுக் கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட சோதனையில் இவற்றை கண்டறிந்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் பொருட்களில் 211 டின் பால் பவுடர், 349 மூட்டை மாவுப் பொடி, 435 புட்டிகள் தலால் எண்ணெய், 9 டின் தலால் காய்கறி நெய், 38 மூட்டை பருப்பு, 787 பாக்கெட்டுகள் மக்கரோனி, 49 மூட்டை அரிசி, 35 மூட்டை சர்க்கரை மற்றும் 323 பாக்கெட்டுகள் தக்காளி பேஸ்ட் என்று மொத்தமாக 2,236 ஐட்டங்கள் அதில் இருந்தன.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் கொள்கலன்களை இலங்கைக்கு அனுப்ப முயற்சி செய்த நபர்களுக்கு எதிராக சட்டரீதியான சுங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மானிய விலை வழங்கப்படும் உணவுப் பொருட்களின் கடத்தல் மற்றும் சட்டவிரோத ஏற்றுமதிக்கு எதிராக சாலை, கடல், ஆகாயம் ஆகிய நுழைவு பாதைகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தப் போவதாகவும், சட்டத்தை மீறிய இப்படிப்பட்ட கடத்தலை செய்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

