Sri Lanka News

மழையினால் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்கு இழப்பீடு

கடந்த நாட்களில் பெய்த பலத்த மழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்கு, மதிப்பீடுகளுக்குப் பின்னர் ஹெக்டேர் ஒன்றுக்கு அதிகபட்சமாக ஒரு இலட்சம் ரூபா வரை இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

நெல், சோளம், உருளைக்கிழங்கு, சோயா, மிளகாய் மற்றும் பெரிய வெங்காயம் உள்ளிட்ட முக்கிய பயிர்களுக்காக இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சேதமடைந்த பயிர்கள் தொடர்பான தகவல்கள் அடுத்த 14 நாட்களுக்குள் அந்தந்த விவசாய சேவை நிலையங்களில் பராமரிக்கப்படும் சேத விபர பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிவாரணத் திட்டத்திற்காக விவசாயிகளிடமிருந்து எந்தவொரு காப்புறுதி தவணைக் கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

சமீபத்திய சீரற்ற வானிலை காரணமாக சில மாவட்டங்களில் பயிர் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், நீர் வற்றிய பின்னரே முழுமையான சேத அளவை கணக்கிட முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டு யல பருவகால பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப கட்டத்திலேயே இந்த மழையால் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் விவசாய மக்களின் பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும் எனவும், தொடர்ச்சியான கண்காணிப்பின் மூலம் விவசாயிகளுக்கு அதிகபட்ச நன்மைகள் வழங்குமாறு விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரால் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button