Sri Lanka News

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மற்றுமொரு வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த மற்றுமொரு வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை எதிர்வரும் ஜுலை மாதம் 7 ஆம் திகதி வரை ஒத்தி வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சதொச நிறுவன ஊழியர்களை அரசியல் பணிகளில் ஈடுபடுத்தி அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டியே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதியரசர் ஆதித்ய படபெந்திகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கில் சந்தேக நபர்கள் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளராக பணியாற்றிய முஹமட் சாகீர் நீதிமன்றத்தில் முன்னிலையானார்கள்.

இதன்போது சதொச நிறுவனத்தின் வேதன கொடுப்பனவு பிரிவின் அதிகாரி மெரின்னகே கொஸ்தாவிடம் சட்டத்தரணிகள் குறுக்கு விசாரணை செய்தனர்.

அதன் பின்னர் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் ஜுலை மாதம் 7 ஆம் திகதி வரை ஒத்தி வைத்த நீதியரசர்கள் ஆயம் அன்றைய தினம் சாட்சிகளை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டது.

இந்த வழக்கு 2010-2014 காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.

Related Articles

Back to top button