News

இலங்கையில் டிஜிட்டல் மயமாகும் அரச அலுவலகங்கள் – புதிய வழிகாட்டல் வௌியீடு


இலங்கையில் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, அரச சேவைகளை டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாகத் தொலைதூர முறையில் முன்னெடுப்பதற்கான புதிய வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கு போர்க்கால சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோகக் கட்டுப்பாடுகளைச் சமாளிக்கும் வகையில், அரச சேவைகளைத் தொலைதூரத்திலிருந்து  வழங்குவதற்கான டிஜிட்டல் வழிகாட்டல்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஈரான் போர் உள்ளிட்ட பிராந்தியப் பதற்றங்களால் தேசிய எரிபொருள் கையிருப்புக்கு ஏற்பட்டுள்ள அழுத்தத்தைக் குறைப்பதற்காக, அலுவலக சேவைகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் முன்னெடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இதற்காக டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் பொது நிர்வாக அமைச்சுக்கள் இணைந்து இந்தப் புதிய திட்டத்தை வகுத்துள்ளன.

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள அரச சேவை முகாமைத்துவக் குழுவின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்கள் முடிந்தவரை தொலைதூரச் சேவை முறைக்கு (Remote working) மாறுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு டிஜிட்டல் பொருளாதார அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதன்படி, டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் அரச நிறுவனத் தலைவர்களுக்காக ‘இடைக்கால வழிகாட்டல்கள்’ வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, சாதாரண அலுவலகப் பணிகளுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பங்களை எவ்வாறு வினைத்திறனாகப் பயன்படுத்துவது என்பது குறித்து வழிகாட்டப்பட்டுள்ளது.

தொலைதூரத்தில் இருந்து சேவைகளை வழங்கும் போது பின்பற்ற வேண்டிய தொழில்நுட்ப முறைகள் விளக்கப்பட்டுள்ளன.

இந்த வழிகாட்டல்கள் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ளன.

இவற்றை அரச நிறுவனத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் [https://mode.gov.lk/docs/guidelines](https://mode.gov.lk/docs/guidelines) என்ற இணைய முகவரியின் ஊடாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

#socialtv #SriLanka #DigitalSriLanka #Government

Related Articles

Back to top button