Sri Lanka News

பல கோடி பெறுமதியான ஹசீஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

முப்பத்தேழு கோடியே எழுபது இலட்சம் ரூபா பெறுமதியான ஹசீஸ் (Hashish) போதைப்பொருள் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட விமானப் பயணிகள் பணம் செலுத்தி வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் ‘கோல்ட் ரூட்’ (Gold Route) பயணிகள் முனையத்தினூடாக இந்த வெளிநாட்டவர் நேற்று (19) நள்ளிரவு நாட்டிற்குள் நுழைய முயன்ற போதே, கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த, அந்நாட்டுப் பல்கலைக்கழகமொன்றில் கல்வி கற்கும் 23 வயதுடைய மாணவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் இந்த “ஹசீஸ்” போதைப்பொருள் தொகையுடன் கனடாவிலிருந்து டுபாய் ஊடாக நேற்று இரவு 11.15 மணிக்கு எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-648 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அங்கு அவர் கொண்டு வந்த 02 பயணப் பொதிகளுக்குள் 37 கிலோகிராம் 639 கிராம் எடையுடைய இந்த “ஹசீஸ்” போதைப்பொருள் தொகை, 146 பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

இவ்வளவு பெரிய மதிப்புடைய “ஹசீஸ்” போதைப்பொருள் தொகை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்பதுடன், 206 அமெரிக்க டொலர் போன்ற பெருந்தொகைப் பணத்தைச் செலுத்தி, ‘கோல்ட் ரூட்’ விசேட பயணிகள் முனையத்தைப் பயன்படுத்தி நாட்டிற்குள் போதைப்பொருள் கடத்த முயன்ற முதல் சந்தர்ப்பமும் இதுவாகும் என விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக, பயணி மற்றும் அவர் கொண்டு வந்த “ஹசீஸ்” போதைப்பொருள் தொகை என்பன கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button