News

அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு! இலங்கையில் அவதிக்குள்ளாகும் நோயாளர்கள்

நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் மருந்து விநியோக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக, பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ரூபாயின் வீழ்ச்சி மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக வெளிநாட்டு மருந்து விநியோகஸ்தர்களால் முறையான விநியோகத்தை முன்னெடுக்க முடியாமல் போயுள்ளது.

அத்துடன், அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் மருந்துகளை இறக்குமதி செய்ய விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

சில மருந்து வகைகளை பதிவு செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதமும் இந்த தட்டுப்பாட்டிற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.

முக்கிய நோய்களுக்கான மருந்துகள் தட்டுப்பாடாக உள்ளதால், மருந்தகங்களில் மருந்துகளைப் பெற்றுக்கொள்வதில் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

குறிப்பாக, புற்றுநோய், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பவர்கள் மற்றும் தொற்றா நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்கள் போன்ற நோயாளர்கள் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

சில நோயாளர்கள் அதிக செலவு செய்து வெளிநாடுகளில் இருந்து மருந்துகளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது சாதாரண மக்களுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் அதிகாரிகள் உடனடியாக தலையிடாவிட்டால், சுகாதார சேவைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button