கொழும்பின் பல பகுதிகளில் இன்று 12 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் இன்று (04) 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, இன்று காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையான காலப்பகுதிக்குள் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகளுடன் பத்தரமுல்லை, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவத்துகொட, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொடை, நாவல, கொலன்னாவை, IDH, கொட்டிகாவத்த, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்த, கடுவலை, மஹரகம, பொரலஸ்குமுவ மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.
இதற்கு மேலதிகமாக தெஹிவளை, கல்கிஸ்சை, இரத்மலானை, மொரட்டுவை, ராவதாவத்தை மற்றும் சொய்சாபுர ஆகிய பகுதிகளுக்கும் நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
மின்சார விநியோகக் கட்டமைப்பின் முல்லேரியா உப மின்நிலையத்துடன் தொடர்புடைய அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதால் இவ்வாறு நீர் விநியோகம் நிறுத்தப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், தெஹிவளை நீர் உந்து நிலையம் மற்றும் மாளிகாவத்தை எலிஹவுஸ் உந்து நிலையம் ஆகியவற்றிலும் மின்சாரக் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் அன்றைய தினம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.




