Sri Lanka News

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட வரிச் சலுகையா? அமைச்சர் நளிந்த விளக்கம்

சமமான வருமானம் ஈட்டும் ஏனையோரை விட, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறைவான வருமான வரி செலுத்துவது தொடர்பாக எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து மீளாய்வு செய்யவுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதன விபரங்கள் இந்த மாத தொடக்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் பகிரங்கப்படுத்தப்பட்டதை அடுத்து, இந்த விவகாரம் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்டது.

தனியார் அல்லது அரச ஊழியர்களுடன் ஒப்பிடுகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்கூட்டிய தனிநபர் வருமான வரி (APIT) ஏன் குறைவாகக் காணப்படுகின்றமை தொடர்பில் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், வரி மதிப்பீடானது அடிப்படை வேதனம் மற்றும் கொடுப்பனவுகளை அடிப்படையாகக் கொண்டது என்றும், சில கொடுப்பனவுகள் முன்கூட்டிய தனிநபர் வருமான வரிக்கு (APIT) உட்பட்டிருக்காது என்றும் குறிப்பிட்டார்.

“யாரும் வரி செலுத்துவதிலிருந்து தப்பிக்கக் கூடாது. வரி செலுத்த வேண்டிய அனைத்து நபர்களும் வரி வலைக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் கொள்கையாகும். வரி வரம்பை விரிவுபடுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்கும் அரசாங்கம் ஆதரவளிக்கிறது.நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருமானத்தில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள பகுதிகள் எவை என்பது குறித்து ஆராயப்படும்” எனத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும் என்றும், இதில் ஏதேனும் முரண்பாடுகள் இருப்பின் அவை மீளாய்வு செய்யப்படும் என்றும் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ஏற்கனவே இரத்துச் செய்துள்ளதோடு, முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளையும் நீக்கியுள்ள அரசாங்கம் இதுவென்றும், அனைவருக்கும் நியாயமான வரி விதிப்பு முறை அமைவதையே தாம் ஆதரிப்பதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதன்போது வலியுறுத்தினார்.

#socialtv #SriLankaNews #Parliament #TaxNews #BreakingNews #NalindaJayatissa #PoliticalNews #SocialTVUpdates

Related Articles

Back to top button