World News

திடீரென மூடப்பட்ட வான்பரப்பு! ஐக்கிய அரபு இராச்சியத்தின் அறிவிப்பு!

ஈரான் முன்னெடுத்துள்ள புதிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு இராச்சியம், தனது வான்பரப்பை தற்காலிகமாக முழுமையாக மூடுவதாக அறிவித்துள்ளது.

நாட்டின் வான்பரப்பை தற்காலிகமாகவும் முழுமையாகவும் மூடுவதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் பொது சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.

விமானங்கள் மற்றும் அவற்றின் பணியாளர்களது பாதுகாப்பை உறுதி செய்யவும், ஐக்கிய அரபு இராச்சிய பிராந்தியத்தைப் பாதுகாக்கவும் இந்த “விதிவிலக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை” எடுக்கப்பட்டுள்ளதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரானின் புதிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்குத் தகுந்த பதிலடி கொடுத்து வருவதாக ஐக்கிய அரபு இராச்சிய பாதுகாப்பு அமைச்சகம் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இதேவேளை ஐக்கிய அரபு இராச்சியத்தின் புஜைரா எண்ணெய் தொழிற்சாலை மண்டலத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் அங்கு பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய்க்கு கிழக்கே சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள புஜைரா எண்ணெய் தொழிற்சாலை மண்டலம் இன்று காலை ட்ரோன் மூலம் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சர்வதேச எரிசக்தி சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் புஜைரா எண்ணெய் சேமிப்பு முனையத்தின் மீதான இந்தத் தாக்குதல், வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Related Articles

Back to top button