Sports

ஐ.சி.சி நடத்தை விதிகளை மீறிய பாகிஸ்தான் வீராங்கனை

முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியின் போது, ஐசிசி நடத்தை விதிகளை மீறியதற்காக பாகிஸ்தான் வீராங்கனை சித்ரா அமீன் உத்தியோகபூர்வமாகக் கண்டிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச போட்டியின் போது கிரிக்கெட் உபகரணங்கள் அல்லது உடைகள், மைதான உபகரணங்கள் ஆகியவற்றைத் தவறாகப் பயன்படுத்துதல் தொடர்பான ஐசிசி நடத்தை விதிகளின் பிரிவு 2.2-ஐ அவர் மீறியுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

சித்ரா அமீனின் ஒழுக்கம் தொடர்பான பதிவேட்டில் ஒரு டிமெரிட் புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மாத காலப்பகுதிக்குள் அவர் செய்த இரண்டாவது தவறு இதுவாகும். இதற்கு முன்னர், 2025 மகளிர் உலகக் கிண்ணத் தொடரில் இந்தியாவிற்கு எதிரான போட்டியின் போதும் அவர் இவ்வாறே டிமெரிட் புள்ளியைப் பெற்றிருந்தார்.

தற்போது அவரது மொத்த டிமெரிட் புள்ளிகளின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியின் 24-வது ஓவரில், தான் ஆட்டமிழந்த பிறகு, மைதானத்தை விட்டு வெளியேறும் போது சித்ரா தனது மட்டையை தரையில் ஓங்கி அடித்தார்.

இதுவே அவர் மீதான குற்றச்சாட்டுக்குக் காரணமாக அமைந்தது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மத்தியஸ்தர் குழுவைச் சேர்ந்த ஷான்ட்ரே ஃபிரிட்ஸ் பரிந்துரைத்த இந்தத் தண்டனையை சித்ரா அமீன் ஏற்றுக்கொண்டார்.

இதனால் இது குறித்து முறையான விசாரணை எதுவும் நடத்தத் தேவையில்லை எனத் தீர்மானிக்கப்பட்டது.

கள நடுவர்களான கெரின் கிளாஸ்டே மற்றும் இலங்கையைச் சேர்ந்த நிமாலி பெரேரா உள்ளிட்ட நடுவர் குழுவினர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.

பொதுவாக, ‘லெவல் 1’ நடத்தை மீறல்களுக்கு உத்தியோகபூர்வ கண்டனம், போட்டி ஊதியத்தில் அதிகபட்சம் 50 சதவீத அபராதம் மற்றும் 1 அல்லது 2 டிமெரிட் புள்ளிகள் தண்டனையாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button