இன்று முதல் தபால் கட்டணங்கள் அதிகரிப்பு

அஞ்சல் கட்டணங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் இன்று (09) முதல் அமலுக்கு வருவதாக அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
இதன்படி, சாதாரண கடிதத்திற்கான கட்டணம் ரூ.50 இலிருந்து ரூ.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளதுடன், பதிவு அஞ்சல் கட்டணம் ரூ.60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொது மற்றும் வணிகக் கடித சேவைகளுக்கான அடிப்படை எடை வகுப்பு 20 கிராமிலிருந்து 30 கிராமாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், ஒரு தாள் அல்லது தாள் தொகுப்பின் அதிகபட்ச எடை 100 கிராமிலிருந்து 120 கிராமாக திருத்தப்பட்டுள்ளது.
தொண்டு நிறுவனங்கள், சமூக சேவைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அனுப்பும் கடிதங்களுக்கான கட்டணம் ரூ.30 இலிருந்து ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், அமைச்சுகள் மற்றும் அரசுத் துறைகளுக்கான அஞ்சல் பொருட்களை பதிவு செய்யும் சிறப்பு சேவையின் கீழ் வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.110 இலிருந்து ரூ.130 ஆக உயர்த்தப்பட்டுள்ளதுடன், அஞ்சல் அட்டைக்கான கட்டணம் ரூ.20 இலிருந்து ரூ.40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலாக, அஞ்சல் அட்டை கட்டணங்கள், விளம்பர அஞ்சல் சேவை, தொலைபேசி அஞ்சல் சேவை, முத்திரை அட்டை, அஞ்சல் பை சேவை, மேலும் செலுத்தப்படாத அல்லது குறைவாக செலுத்தப்பட்ட அஞ்சல் பொருட்களுக்கான குறைந்தபட்ச கூடுதல் கட்டணங்களிலும் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் துறை குறிப்பிட்டுள்ளது.




