Accident

மட்டக்களப்பில் இரு கோர விபத்துக்கள்: சிறுவன் மற்றும் இளைஞர் பலி!

மட்டக்களப்பில் இரு கோர விபத்துக்கள்: சிறுவன் மற்றும் இளைஞர் பலி!
மட்டக்களப்பு, கிரான் மற்றும் சந்திவெளிப் பகுதிகளில் இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு வீதி விபத்துகளில் 15 வயதுச் சிறுவன் மற்றும் 19 வயது இளைஞர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவங்கள் நேற்று முன்தினம் (15) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளன.

வாழைச்சேனையில் இருந்து சந்திவெளி நோக்கிப் பயணித்த கனரக வாகனமும், அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதியதில் முதலாவது விபத்து சம்பவித்துள்ளது.

இவ்விபத்தில் கிரான் பிரதான வீதியைச் சேர்ந்த 19 வயதான சுரேந்திரன் கிறசன் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.

விபத்துத் தொடர்பில் கனரக வாகனத்தின் சாரதியை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதேவேளை, சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலையடித்தோணா பகுதியில் நேற்று மாலை 5.00 மணியளவில் மற்றுமொரு விபத்து இடம்பெற்றது.

ஒரே மோட்டார் சைக்கிளில் 16 வயதுக்குட்பட்ட மூன்று சிறுவர்கள் அதிவேகமாகப் பயணித்துள்ளனர்.

இதன்போது வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், வீதியோரத்திருந்த மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 15 வயதான ஜெயசீலன் ஜெதுசன் என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அத்துடன் 14 மற்றும் 16 வயதுடைய மற்றைய இரு சிறுவர்களும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இரு விபத்துக்கள் தொடர்பிலும் அந்தந்தப் பகுதிப் பொலிஸ் நிலையங்களின் போக்குவரத்துப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button