Sri Lanka News

மின்சார சபையின் கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு முன் பதற்றம்; கடும் போக்குவரத்து நெரிசல்

சுகயீன விடுமுறையை அறிவித்து முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கையுடன் இணைந்து மின்சார சபை தொழிற்சங்கங்கள் மின்சார சபையின் கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக, தலைமை அலுவலகத்திற்கு முன்பாக உள்ள வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மின்சார சபையின் தன்னிச்சையான மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 4 ஆம் திகதி முதல் மின்சார தொழிற்சங்கங்கள் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில், தொழிற்சங்க நடவடிக்கையின் மற்றொரு கட்டமாக, சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை நேற்று ஆரம்பமானது.

அதன்படி, இன்று இரண்டாவது நாளாகவும் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள், இன்று தங்கள் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்குமென இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் மின் அத்தியட்சகர்கள் சங்கத்தின் தலைவர் என்.பி.எஸ்.சம்பத் தெரிவித்தார்.

தற்போது ஜனாதிபதியுடனான கலந்துரையாடலே தங்களுடைய முக்கிய கோரிக்கை என்றும் தொடர்புடைய கோரிக்கைகள் அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை சரியான பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அதன்படி, இன்று தொழிற்சங்கங்கள் எடுக்கும் எதிர்கால முடிவு பணிப்புறக்கணிப்பாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

Back to top button