
நுவரெலியா அஞ்சல் நிலையக் கட்டடத்தை விருந்தகமாக மாற்றுவதற்கு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவை எடுத்த முடிவை இரத்துச் செய்ய, தற்போதைய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் நிறுவனம் ஒன்று நுவரெலியாவின் அஞ்சல் நிலையத்தைச் சுற்றி ஒரு விருந்தகத்தை நிர்மாணிக்க திட்டமிட்டிருந்தது.
ஆனால், பொதுமக்களின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து அந்த திட்டம் மீளப் பெறப்பட்டது.
அத்துடன், நுவரெலியா அஞ்சல் நிலையக் கட்டடத்தை நகர அபிவிருத்தி சபைக்கு மாற்றுவதற்கான முன்மொழிவையும் முன்னாள் அமைச்சரவை அங்கீகரித்திருந்தது.
இருப்பினும், அந்த நேரத்தில் அஞ்சல் துறை ஊழியர்களால் அதற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்தநிலையில், நுவரெலியா அஞ்சல் நிலையக் கட்டடத்தையும், அதன் வளாகத்தையும் நகர அபிவிருத்தி சபைக்கு மாற்றுவதற்கான அமைச்சரவையின் முடிவை இரத்து செய்ய, சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் சமர்ப்பித்த தீர்மானத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதற்குப் பதிலாக, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கவும், புதிய வருமானம் ஈட்டும் வாய்ப்புகளை அதிகரிக்கவும், தற்போதுள்ள கட்டடத்தையும் அருகிலுள்ள நிலத்தையும் மேம்படுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது.