இன்று அமைச்சரவை கலந்துரையாடி தீர்வொன்றை பெற்றுக் கொடுப்பதாக அமைச்சர் உறுதி…!!
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஒன்பது பெண் சுகாதார சேவை உதவியாளர்கள் தமது கலாசார மற்றும் மத ஆடைகளுடன் பணியாற்றுவது தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு உடனடி தீர்வைப் பெற்றுக்கொடுக்குமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (17) முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையிலான குழுவினர் அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினரான வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை நேரடியாக சந்தித்து வலியுறுத்தி உள்ளார்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள சுகாதார சேவை உதவியாளர்களது சீருடை தொடர்பான பிரச்சினை கடந்த இரண்டு வாரங்களாக நீடித்து வருவதாக அமைச்சரிடம் இதன்போது இவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத்,
இந்த விடயம் தொடர்பில் இன்றைய அமைச்சரவையிலும் ஜனாதிபதி மட்டத்திலும் கலந்துரையாடி தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இலங்கையின் பல்வேறு அரச திணைக்களங்களிலும் சுகாதார நிறுவனங்களிலும் பணியாற்றும் ஊழியர்கள் தமது கலாசார மற்றும் மத அடையாளங்களுக்கு ஏற்புடைய ஆடைகளை அணிந்து கடமையாற்றுவது வழக்கமான விடயமாக உள்ள நிலையில், கல்முனை வைத்தியசாலையில் மாத்திரம் இவ்வாறானதொரு பிரச்சினை உருவாகியிருப்பது கவலைக்குரிய விடயம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

