Sri Lanka News

சிவநேசத்துரை சந்திரகாந்தன் எதிர்வரும் ஜுலை மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

மனித கடத்தல் மற்றும் கொலைகள் தொடர்பான வழக்கில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எதிர்வரும் ஜுலை மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர், பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று முற்பகல் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட மனித படுகொலைகள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பிலேயே அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

மட்டக்களப்பில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக் கொலை, வர்த்தகர் ஒருவர் கொலை, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர் சுட்டுக் கொலை, கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தல் உட்பட மனித கொலைகள் தொடர்பிலேயே பிள்ளையான் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதன்படி வழக்குடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரும் இன்று மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button