Uncategorized

மண்சரிவு அச்சத்தால் வெளியேறிய குடும்பங்கள் – பல பகுதிகளில் அவசர எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலையும், பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியக்கூறுகளும் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேலும், மன்னார் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவுக்குப் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பு தொடக்கம் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை, மன்னார், கொழும்பு, காலி , ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும். இக் கடல் பிராந்தியத்தியங்களுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்நிலையில் களு கங்கையின் கிளையாறான குடா கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் சிறிய அளவிலான வெள்ள நிலைமை பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தொடர் மழை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நேற்று பிற்பகல் 4.00 மணி முதல் இன்று பிற்பகல் 4.00 மணி வரை அமலில் இருக்கும் வகையில் முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

களுத்துறை மாவட்டம்: பாலிந்தநுவர மற்றும் அகலவத்தை.நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ.இரத்தினபுரி மாவட்டம்: அயகம, பெல்மடுல்ல, கொடகவெல, எலபாத, கலவானை, இரத்தினபுரி மற்றும் நிவித்திகலை.

மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வாழும் மக்கள் மண்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து விழும் அபாயம் குறித்து விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இரத்தினபுரி மாவட்டம், கொடகவெல மாகந்துர பஸ்னகந்த பகுதியில் நிலவும் மண்சரிவு அபாயம் காரணமாக அங்கு வசித்து வந்த ஆறு குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தொடர் மழை காரணமாக மலை உச்சியில் இருந்த பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதாலும், பாறைகள் உருண்டு விழும் அபாயம் காணப்படுவதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் இறுதி அறிக்கையின் அடிப்படையில் இவர்களுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button