ஐதராபாத் கோட்டையில் சரிந்தது சென்னை; சன்ரைசர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி!

ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் 59 ரன்களையும், ஹென்ரிச் கிளாசன் 39 பந்துகளில் 59 ரன்களையும் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினர்.
சென்னை அணியின் தரப்பில் அன்ஷுல் கம்போஜ் மற்றும் ஜேமி ஓவர்டன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.195 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மேத்யூ ஷார்ட் 34 ரன்களும், சர்பராஸ் கான் 25 ரன்களும் எடுத்து ஓரளவுக்குப் போராடினர். இறுதி ஓவர்களில் ஷிவம் துபே (21) அதிரடி காட்ட முயன்றார், ஆனால் சாகிப் உசேன் வீசிய பந்தில் அவர் ஆட்டமிழந்தது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. ஈஷன் மலிங்கா சிறப்பாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.கடைசி ஓவரில் சென்னை வெற்றி பெற 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பிரஃபுல் ஹிங்கே அந்த ஓவரை மிகவும் நேர்த்தியாக வீசி சென்னை அணியை 184 ரன்களுக்குக் கட்டுப்படுத்தினார்.
இதன் மூலம் ஹைதராபாத் அணி இந்த சீசனில் தனது தொடர்ச்சியான இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியது. இந்தத் தோல்வியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 8-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.




