Sri Lanka News

நாட்டில் வழமைக்கு மாறாக அதிகரிக்கும் வெப்பநிலை; கடுமையாகப் பாதிக்கப்படவுள்ள மாவட்டங்கள்

நாட்டில் மனித உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையிலான கடும் வெப்பமான வானிலை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் மெரில் மென்டிஸ்,சர்வதேச ரீதியில் கடந்த சில ஆண்டுகளில் சராசரி வெப்பநிலை வழமையை விட 1 முதல் 1.5 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரித்துள்ளது.

இதுவே தற்போதைய கடும் வெப்ப நிலைக்கு முக்கிய காரணமாகும்.பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள ‘எல் நினோ’ காலநிலை மாற்றத்தினால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை மேலும் அதிகரித்து வருகின்றது.

இதன் விளைவாக, எதிர்வரும் வாரங்களில் நாட்டின் வெப்பநிலை வழமையை விடவும் மிக அதிகமாகக் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் வரட்சியான காலநிலையும் ஏப்ரல் மாதம் முழுவதும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சப்ரகமுவ, வடமேல், மேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்கள் வெப்பநிலை அதிகரிப்பினால் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என அடையாளங்காணப்பட்டுள்ளன.

கடும் வெப்பத்தினால் ஏற்படக்கூடிய உடல்நல பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button