Sri Lanka News

நாடளாவிய ரீதியில் 24 மணிநேரத்தில் அதிரடி சோதனை: 660 பேர் கைது!

நாடு முழுவதும் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுவரும் விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, மொத்தம் 28,078 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் மொத்தம் 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் 234 பேருக்கு எதிராகத் தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை (Open Warrant) பிறப்பிக்கப்பட்டிருந்த 90 சந்தேக நபர்களும் இந்த அதிரடி சோதனையின் போது சிக்கியுள்ளனர்.மதுபோதையில் வாகனம் செலுத்திய 109 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கவனக்குறைவாகவும் வாகனங்களைச் செலுத்திய 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பாரியளவிலான பீடி இலைத் தொகையொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்று (25) அதிகாலை நீர்க்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொதலாவல பாலத்திற்கு அருகிலுள்ள களப்புப் பகுதியில், நீர்க்கொழும்பு கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, இரண்டு படகுகளைப் பயன்படுத்தி கடத்தி வரப்பட்ட 596 கிலோகிராம் 750 கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த இரண்டு படகுகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு நீர்க்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நீர்க்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button