News

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் புத்தாண்டு வாழ்த்து செய்தி!

பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டானது, இந்நாட்டு மக்களின் பிரதான கலாசார விழாவாகும்.

பாரம்பரிய சம்பிரதாயங்களைப் பாதுகாத்து, சுபநேரச் சடங்குகளுக்கும் சமயக் கிரியைகளுக்கும் முன்னுரிமை அளித்து, கூட்டாக ஒரே சுபநேரத்தில் சிங்கள தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்பாட்டுப் பகிர்வு உலகிற்கு முன்னால் எமது நாட்டின் அடையாளத்தையும், எமது சமூகங்களுக்கு இடையே நிலவும் சமூக-கலாசார பிணைப்பையும் சிறப்பாகப் பிரதிபலிக்கிறது.

நாட்டின் எதிர்கால அபிவிருத்திப் பாதையை, இந்த பெறுமதிமிக்க கலாசாரம் மற்றும் உன்னதமான வரலாற்று மரபுரிமைகளுடன் இணைந்தே தெரிவு செய்ய முடியும் என நாம் உறுதியாக நம்புகின்றோம். அதற்கமைய, எமது அனைத்து எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களும் அந்த பெறுமதியான மரபுரிமைகள் மற்றும் கலாசாரத்தின் மீது வலுவாக உருவாக்கப்பட்டுள்ளன என்பதை இங்கு நினைவுபடுத்த வேண்டும்.

அதேபோல், சூரிய பெயர்ச்சியைத் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் அனைத்துச் சடங்கு முறைகளின் பொதுவான எதிர்பார்ப்பானது, கூட்டுப்பண்பை மதிக்கும், பிறரையும் இயற்கையின் இருப்பையும் கௌரவிக்கும் ஒரு புதிய மனிதனை உருவாக்குவதாகும். புத்தாண்டின் சடங்கு முறைகளில் வெளிப்படும் கூட்டுப்பண்பின் குணாதிசயங்களும் விழுமியங்களும் அந்த சில நாட்களுக்கு மாத்திரமன்றி, முழு வருடமும் எமது நடத்தைகளில் பிரதிபலிக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.

கடந்த வருடம் முகங்கொடுத்த பாரிய இயற்கை அனர்த்தத்தின் போது உள்ளக அதிர்வுகளுக்கு தாக்குப் பிடிக்கும் இயலுமையை உலகிற்கு காண்பித்தோம். மத்திய கிழக்கு பிராந்தியத்தின் போர்ச் சூழல் நிலைமையில் ஏற்பட்டுள்ள வெளிப்புறச் சவால்களை வெற்றிகொள்வதற்குத் தேவையான வேலைத்திட்டங்களை அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளது. நாடென்ற வகையில் ஒன்றாக இந்த சவால்களை வெற்றிகொள்கையில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் வெளிப்படுத்தப்படும் கூட்டுப்பண்பு மற்றும் பகிர்ந்துகொள்ளல் போன்ற பண்புகளினால் , எமது வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என நான் அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.

அடைந்த வெற்றிகளை மேலும் அர்த்தமுள்ளதாக்குவதோடு, எழுந்துள்ள சவால்களுக்கு மத்தியில் தளராது முன்னேறி, ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்பதை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு கைகோர்க்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுப்பதோடு, பிறந்துள்ள இந்தச் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த இனிய புத்தாண்டாக அமைய எனது மனப்பூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அநுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
2026 ஏப்ரல் 14 ஆம் திகதி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button