Sri Lanka News

நுவரெலியாவில் கன மழை – பாதிப்புக்குள்ளான இயல்புவாழ்க்கை!

காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை வேளையில் பல இடங்களில் கடும் மழை பெய்து வருகின்றது.

நுவரெலியா மாவட்டத்தில் சகல பகுதிக்களிலும் இன்று 13 ம் திகதி அதிகாலை வேளையில் சுமார் 2.00 மணி முதல் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளானது.

இப் பகுதியில் உள்ள அனைத்து கால்வாய்கள் நிறைந்து கழிவு நீர் வீதிகளில் பெருக்கெடுத்து ஓடியதனால் பாடசாலை மாணவர்கள் உட்பட பொது மக்கள் பாதசாரிகள் வீதியில் நடந்து செல்ல முடியாது பெரும் சிரமங்களை எதிர் நோக்கினர்.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக நுவரெலியா வலப்பனை கொத்மலை ஹங்குராகெத்த ராகலை பூண்டுலோயா டயகம தலவாக்கலை கொட்டகலை பொகவந்தலாவ மஸ்கெலியா சாமிமலை நோட்டன் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் வட்டவளை தியகலை கர்லினா,கினிகத்தேனை பிட்டவல ஆகிய பகுதிகளிலும் ஹட்டன் நுவரெலியா வீதியில் குடாகம,கொட்டகலை,சென்கிளையார்,ரதல்ல நானுஓயா ஆகிய பகுதிகளில் மழையுடன் கடும் பணி மூட்டம் காணப்படுவதனால் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறும் பணி மூட்டம் காரணமாக வாகனங்களில் உள்ள மின் குமிழ்களை மிளிர செய்து வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் சாரதிகளை அறிவுரை வழங்கி வருகின்றனர்.

இத வேளை ஹட்டன் கொழும்பு பிரதான வீதியிலும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியிலும் டிட்வா சூறாவளியில் ஏற்பட்ட மண்சரிவுகள் தற்போது தொடர் மழை காரணமாக மீண்டும் சரிவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதனால் மலையக வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதான வாகனங்களை செலுத்துமாறு கேட்டுக் கொள்ள படுகின்றனர்.

தொடர்ந்தும் பெய்து வரும் மழை காரணமாக பண்ணையாளர்கள் விவசாய தொழில் ஈடுபடுபவர்களும், அன்றாட கூலித்தொழிலில் ஈடுபடுபவர்களும் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

ஹட்டன் பகுதியில் கழிவுகள் முறையாக அகற்றப்படாமையின் காரணமாக பொலித்தீன்கள் மற்றும் பிலாஸ்ரிக் போத்தலகள் கால்வாய்களில் அடைத்து மழையின் போது வீதியில் மழைநீர் வழிதோடுவதாகவும் ஹட்டன் பகுதியில் காணப்படும் பல குறுக்கு வீதியில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அன்றாடம் மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் இது குறித்த உரிய அதிகாரிகளை தெளிவு படுத்திய போதிலும் சரியான தீர்வுகளை பெற்றுக் கொடுக்காததன் காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றன.

ஹட்டன் வட்டவளை பிரதான சாலை அருகே முன்னைய வாடி வீடு அமைந்துள்ள பகுதியில் ஹட்டன் நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சேரும் குப்பைகளை கொட்டுவதால் அவ்வழியாக வாகனங்களில் செல்லும் போதும் நடந்து செல்லும் போது பாரிய அளவிலான துர் நாற்றம் வீசுகிறது இதனால் பாரிய சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button