முதியோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 37.79 லட்சம் பேருக்கு சிறப்பு நிதி 2 ஆயிரம் ரூபாய் வரவு வைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

முதியோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 37.79 லட்சம் பேருக்கு சிறப்பு நிதி 2 ஆயிரம் ரூபாய் வரவு வைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்கு கோடைக்காலச் சிறப்பு நிதியாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கியதை அடுத்து தற்போது சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள முதியோர், கைம்பெண்கள் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 37.79 லட்சம் பேருக்கு அவர்களது வங்கிக்கணக்கில் மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சிறப்பு நிதியாக 2 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், 1.62 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடித் தடை கால உதவித்தொகை தலா ரூ.8,0000 வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிதி வழங்க கோரிக்கை….
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விளிம்புநிலையில் இருப்போர்க்கும் சிறப்பு நிதி. கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்தன.
மாத ஓய்வூதியத்துடன்…
நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றியுள்ளோம். நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக 2000 ரூபாயை மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம். இதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என, மொத்தம் 29 லட்சத்து 29 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா 3200 ரூபாயும், 5 லட்சத்து 92 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 3,500 ரூபாயும், பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2 லட்சத்து 58 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு, தலா 4000 ரூபாயும் இன்று (நேற்று) காலை வழங்கியிருக்கிறோம்.
மீனவ குடும்பங்களுக்கு…
அதுமட்டுமின்றி, மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்திற்கான மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக, குடும்பம் ஒன்றுக்கு ரூ.8000 வீதம் மொத்தம் 1,62,900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்குக் கிலோ இரண்டு ரூபாய் ஆதார விலை என 8.53 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது. இந்தத் தருணத்தில் மீண்டும் ஒருமுறை சூளுரைக்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம். வெல்வோம் ஒன்றாக. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




