கனடாவில் தற்காலிக விசா கட்டுப்பாடுகள் தீவிரம் விசா காலாவதியானவுடன் கட்டாய வெளியேற்றம் – புதிய கண்காணிப்பு நடைமுறைகள்

கனடாவிற்கு தற்காலிக விசாவில் வருகை தருபவர்கள், விசா காலம் முடிந்தவுடன் கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்பட உள்ளதாக கனேடிய குடிவரவுத் துறை அமைச்சர் லெனா மெட்லெஜ் தியாப் தெரிவித்துள்ளார்.
தற்காலிக விசாவில் கனடாவிற்கு வரும் நபர்கள் விசா காலாவதியான பின்னர் உண்மையில் நாட்டை விட்டு வெளியேறுகிறார்களா என்பதை கண்காணிப்பதற்காக புதிய டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. தற்போது ஒருவர் கனடாவை விட்டு வெளியேறும் போது அவர்களின் தகவல்கள் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் விசா காலம் முடிந்த பின் தானாக சரிபார்க்கும் கண்காணிப்பு முறைமை இல்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையை மாற்றுவதற்காக புதிய கண்காணிப்பு நடைமுறைகள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2026 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1.9 மில்லியன் தற்காலிக விசாக்கள் காலாவதியாகும் என கனேடிய குடிவரவுத் துறை அறிவித்துள்ளது.
விசிட்டர் விசா உள்ளிட்ட தற்காலிக விசாக்களில் பல தமிழர்கள் கனடாவிற்கு சென்றுள்ள நிலையில், இந்த புதிய கட்டுப்பாடுகள் அவர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது.




