Sri Lanka News

தரம் 6 கல்விச் சீர்திருத்தம் 2027 இற்கு ஒத்திவைப்பு: தரம் 1 இல் மாற்றமில்லை!

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள 6 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மீண்டும் மீளாய்வு செய்து, 2027 ஆம் ஆண்டில் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும், 1 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்கள் இந்த ஆண்டு எவ்வித மாற்றமுமின்றி நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய 6 ஆம் தர ஆங்கிலக் கற்றல் தொகுதி (Module) தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சு முன்னெடுத்த விசாரணை அறிக்கைகளின் முடிவுகளின் அடிப்படையில், அதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகளுக்கு எதிராக தேசிய கல்வி நிறுவனத்தின் நிர்வாக சபை ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.

அதற்கமைய, மனிதவள மேம்பாடு , உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள், மதிப்பீடு மற்றும் மதிப்பாய்வு நடவடிக்கைகள், பாடத்திட்ட மேம்பாடு, பொதுமக்களுக்கான விழிப்புணர்வு மற்றும் ஊக்குவிப்பு ஆகிய 5 முக்கிய தூண்களின் அடிப்படையில் குறித்த கல்விச் சீர்திருத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தரம் 6 மொடியூல் தொடர்பாகவும் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவிற்கு எதிராகவும் பல சர்ச்சைகளும் போராட்டங்களும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button