News

சுகாதார அமைச்சு ஊழியர்களின் விடுமுறைக்கு தற்காலிக தடை

இலங்கை சுகாதார அமைச்சின் ஊழியர்கள் விடுமுறை பெறுவதால் அமைச்சின் அத்தியாவசியப் பணிகளில் ஏற்பட்ட சிக்கல்களைத் தீர்க்க, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விடுமுறைகளை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அனில் ஜாசிங்கவினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமைச்சில் உள்ள அனைத்து பதவி வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்புகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த முடிவுக்கு எதிராக இலங்கை இலவச சுகாதார சேவை சங்கம், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு அனுப்பிய கடிதத்தில், இந்த சுற்றறிக்கை நிறுவனக் குறியீட்டில் உள்ள வெளிநாட்டு விடுமுறை ஒதுக்கீடுகளை இரத்து செய்வதாகவும், பொது நிர்வாக சுற்றறிக்கையின் கீழ் உள்ள உள்நாட்டு விடுமுறை உரிமைகளையும் இல்லாது செய்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால், வெளிநாட்டு விடுமுறைக்கு விண்ணப்பித்து, பயிற்சி மற்றும் விசாக்கள் பெற்ற சுகாதார ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்வதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, சுகாதார அமைச்சின் இந்த முடிவை வலுவற்றதாக்கி, சுற்றறிக்கையை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button