World News

யுக்ரைனில் ரஷ்யாவின் தொடர் வான்வழித் தாக்குதல் – 12 பேர் உயிரிழப்பு, 40-க்கும் மேற்பட்டோர் காயம்

யுக்ரைனின் பல்வேறு பிராந்தியங்களைக் குறிவைத்து ரஷ்யா நேற்று (29) மேற்கொண்ட வான்வழி தாக்குதல்களில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு யுக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஸெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இது பொதுமக்களை இலக்காகக் கொண்ட “பயங்கரமான தாக்குதல்” என அவர் விபரித்துள்ளார்.

ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல்களில் யுக்ரைனின் பல்வேறு உள்கட்டமைப்புகள், குடியிருப்புகள் மற்றும் பொதுச் சொத்துகள் முழுமையாகவும், பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் உயிரிழந்ததுடன், 29 பேர் காயமடைந்துள்ளனர்.

அதேவேளை, தெற்கு நகரமான ஜபோரிஜியாவில் ரஷ்ய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும், வடக்கு சுமி பிராந்தியத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 69 வயதுடைய பெண் ஒருவரும், 77 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யா மேற்கொண்ட இந்த திடீர் தாக்குதல்களால் யுக்ரைனின் குறைந்தது 6 பிராந்தியங்களில் உயிரிழப்புகளும் பாரிய சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button