Sri Lanka News

பொசன் பௌர்ணமி தினத்தில் 18,000 தன்சல்கள்!

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னட்டு நாடளாவிய ரீதியில் 18,000 க்கும் மேற்பட்ட தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இதுவரையில் 18,412 தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்துள்ளார்.

இன்று மற்றும் நாளை நடத்தப்படவுள்ள இந்த தன்சல்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன், பொசன் வலயங்களைச் சுற்றியுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் தற்காலிக பொசன் வர்த்தக நிலையங்களும் இந்த வாரம் முழுவதும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

இதேவேளை, தன்சல்களில் உணவு மற்றும் பானங்களை வழங்கும் போது பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்குமாறு தன்சல் ஏற்பாட்டாளர்களிடம் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சூடான மற்றும் குளிர்ந்த உணவுகளை பொலித்தீன் பைகளில் சேமித்து வைப்பது மிகவும் ஆபத்தானது என்றும், இது குறித்து அதிக கவனம் செலுத்திச் செயலாற்றுமாறும் தன்சல் ஏற்பாட்டாளர்களுக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், தற்போது பெரும் தொற்று நிலையை எட்டியுள்ள டெங்கு நோய் நிலைமை குறித்தும் அவதானம் செலுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, பானங்களை வழங்கும் போது பயன்படுத்தப்படும் பொருட்கள் குறித்து விசேட கவனம் செலுத்தி, சரியான முறையில் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.

Related Articles

Back to top button