சேவை ஏற்றுமதி மூலம் 5 பில்லியன் டொலர் வருமானத்தை இலக்கு வைக்கும் இலங்கை

இலங்கையின் சேவை ஏற்றுமதித் துறையில் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப துறை பெரும் பங்களிப்பை வழங்கி வருவதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.
2026ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் இத்துறை மூலம் சுமார் 536 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதுடன், வருடாந்தம் 20 சதவீத வளர்ச்சியும் பதிவாகியுள்ளதாக
நேற்று நடைபெற்ற ஊடகக் கலந்துரையாடலில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பணிப்பாளர் இந்துமினி கொடிகார குறிப்பிடுகையில்,
சேவை ஏற்றுமதியில் தொழில்நுட்பத் துறையின் பங்களிப்பு சுமார் 1.7 சதவீதமாகக் காணப்படுவதுடன், இது தேயிலை ஏற்றுமதி வருமானத்தை விடவும் அதிகமாகும் எனவும் குறிப்பிட்டார்.
2030ஆம் ஆண்டளவில் ஒட்டுமொத்த சேவைத் துறை வருமானத்தை 5 பில்லியன் டொலராக உயர்த்துவதே ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் இலக்காகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், போக்குவரத்து மற்றும் தளபாடத் துறை 1.9 சதவீத வளர்ச்சியைக் காட்டியுள்ளது எனவும், கொழும்பு துறைமுகத்தில் கையாளப்படும் கொள்கலன்களின் அளவை 7 பில்லியனிலிருந்து 9 பில்லியன் ஆக அதிகரிக்க முனையங்கள் தரமுயர்த்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இதுவரை பயன்படுத்தப்படாத மின்னணு-மின்சார சேவைகள் மற்றும் கடல்சார் சேவைகள் மூலம் புதிய வாய்ப்புகளைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் வழிகாட்டலில், இலங்கை சுங்கம் மற்றும் துறைமுக அதிகார சபை ஊடாக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மையங்கள் இதற்காகப் பயன்படுத்தப்படவுள்ளன.
தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், ஜப்பான் – இந்தியப் பொருளாதார பெருவழியைப் பயன்படுத்தி உலக சந்தையை அணுகவும், ஏனைய நாடுகளுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் இலங்கை திட்டமிட்டுள்ளது.




