சொத்துக்களை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை! – பகிரங்கப்படுத்த தயாரென மஹிந்த அறிவிப்பு

தனது சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு நேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எனக்கோ அல்லது எனது குடும்ப உறுப்பினர்களுக்கோ சொத்துக்களை மறைக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.
அதற்கமைய, ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு இணங்க உரிய ஆவணங்களை வழங்க தான் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2010 – 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணை ஒன்றிற்கு அமைவாகஇ தனது சொத்து விபரங்களை சத்தியக்கடதாசி மூலம் சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன்படி இன்று ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு மேல் மேலதிக காலம் வழங்கப்படமாட்டாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மஹிந்த ராஜபக்சவைத் தவிர, ஏனைய பல முக்கிய அரசியல்வாதிகளுக்கும் கடந்த வியாழக்கிழமை (03) இவ்வாறான அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
அவர்கள் 12 நாட்களுக்குள் தமது சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
குறித்த காலப்பகுதிக்குள் விபரங்களை வழங்கத் தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.




