Sri Lanka News

ரிஷாட் பதியுதீன் மேன்முறையீட்டு விசாரணையிலிருந்து மற்றுமொரு நீதியரசரும் விலகல்

வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகில் உள்ள காடுகளை அழித்து மீள்குடியேற்றம் செய்தமைக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரிப்பதிலிருந்து உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் இன்று (27) விலகியுள்ளார்.

ரிஷாட் பதியுதீனால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேன்முறையீடு, இன்று ஏ.எச்.எம்.டி. நவாஸ், சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த மனு விசாரணையிலிருந்து தான் விலகுவதாக நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தெரிவித்தார்.

இதற்கமைய, இந்த மேன்முறையீட்டு மனுவை வேறு ஒரு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் செப்டம்பர் மாதம் 09ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.

வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகிலுள்ள காடுகளை அழித்து அங்கு மக்களைக் குடியேற்றியமைக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சுற்றுச்சூழல் நீதி மையம் 2015ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிப்பேராணை மனு (Writ) மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது.

அந்த மனுவை விசாரித்து தீர்ப்பளித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த பகுதிகளில் காடுகளை அழித்தமைக்கு முன்னாள் அமைச்சரே பொறுப்புக்கூற வேண்டும் என்றும், அதற்கமைய மீண்டும் காடுகளை வளர்ப்பதற்கான செலவை அவர் வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அதன்படி, மீண்டும் காடுகளை வளர்ப்பதற்காக முன்னாள் அமைச்சர் சுமார் 106 கோடி ரூபாய் பணத்தைச் செலுத்த வேண்டும் என வனப் பாதுகாப்புத் திணைக்களம் கணக்கிட்டிருந்தது.

இந்த மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது எனவும், அதனை ரத்து செய்யுமாறு கோரியுமே ரிஷாட் பதியுதீன் உயர்நீதிமன்றத்தில் இந்த மேன்முறையீட்டைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு விசாரணையிலிருந்து நீதியரசர்களான மஹிந்த சமயவர்தன, யசந்த கோதாகொட, ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் ஏற்கனவே விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button