Sri Lanka News

இலங்கையில் மீண்டும் நோய்; இரு சிறுவர்கள் அடையாளம்!

இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டிருந்த தட்டம்மை நோய் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை தட்டம்மையை முற்றாக ஒழித்த நாடு என 2019ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்தது.

எனினும், 2023ஆம் ஆண்டிற்குப் பிறகு நாட்டின் சில பகுதிகளில் மீண்டும் ஆங்காங்கே தட்டம்மை நோயாளர்கள் பதிவாகத் தொடங்கினர்.

2025 ஜனவரி முதல் இதுவரை எந்தவொரு நோயாளரும் பதிவாகாத நிலையில், தற்போது மீண்டும் இருவர் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அத்துல லியனபத்திரண கருத்து தெரிவிக்கையில்,பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனின் மாதிரிகள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில், அந்த வைரஸ் வெளிநாட்டிலிருந்து வந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தட்டம்மை நோய் குணமடைந்தாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக பல ஆண்டுகளுக்குப் பிறகு மரணம் சம்பவிக்கும் அபாயம் உள்ளது.தட்டம்மை தாக்கினால் உடலின் நோய் எதிர்ப்பு நினைவாற்றல் பாதிக்கப்படும்.

இதனால் மற்ற நோய்களை எதிர்கொள்ளும் திறனை உடல் இழக்க நேரிடும்.தட்டம்மை குணமடைந்து பல வருடங்களுக்குப் பிறகு மூளையைப் பாதிக்கும் SSPE எனும் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

இது மெல்ல மெல்ல மரணத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு கொடிய நிலையாகும்.

எனவே, தட்டம்மை தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாத அல்லது ஒரு டோஸ் மட்டும் பெற்றுக்கொண்ட சிறுவர்களுக்கு, உடனடியாகவும் முறையாகவும் தடுப்பூசிகளை வழங்குமாறு சுகாதாரப் பிரிவினர் பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button