Sri Lanka News

அதிகரிக்கும் பதின்ம வயது கர்ப்பங்கள் – இலங்கை பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை!

இலங்கையில் பதின்ம வயதுக் கர்ப்பங்கள் அதிகரித்து வருவதாகவும் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக பெற்றோரும் சமூகமும் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என பொலிஸ் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

குடும்பங்களுக்குள் ஏற்படும் பாசப்பிணைப்பு குறைபாடுகள் மற்றும் பெற்றோரின் கவனயீனம் காரணமாக, பல இளம் சிறுமிகள் வெளிப்புற அன்பையும் ஆதரவையும் நாடும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்கும் புகார்களின் அடிப்படையில், பெற்றோர்கள் பிள்ளைகளின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் உணர்வுப் தேவைகள் குறித்து போதிய கவனம் செலுத்தாதபோது, அவர்கள் ஆபத்தான தொடர்புகளிலும் தவறான முடிவுகளிலும் சிக்கிக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சட்டவிரோத மற்றும் முதிர்ச்சியற்ற கர்ப்பங்கள் கல்வியையும் எதிர்கால இலக்குகளையும் கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும் பொலிஸ் எச்சரித்துள்ளது.

பிள்ளைகளுடன் திறந்த மனதுடன் உரையாடி, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை பகிரக்கூடிய பாதுகாப்பான குடும்ப சூழலை உருவாக்க வேண்டும் என பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, தொலைபேசி மற்றும் சமூக ஊடகப் பயன்பாடுகளை கண்காணிப்பதோடு, திடீர் நடத்தை மாற்றங்களையும் கவனிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஏதேனும் அச்சுறுத்தல், துஷ்பிரயோகம் அல்லது பிரச்சினைகள் ஏற்பட்டால், உடனடியாக பெற்றோர், ஆசிரியர்கள் அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திடம் தெரிவிக்க வேண்டும் எனவும், 119, 118, 109, 107 ஆகிய அவசர உதவி எண்களை பயன்படுத்துமாறும் பொலிஸ் ஊடகப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

Back to top button