Sri Lanka News

பிரதமரின் புதிய கல்வி இலக்கு

நாட்டின் அனைத்துப் பகுதிகளில் உள்ள பிள்ளைகளுக்கும் புதிய தொழில்நுட்ப வாய்ப்புகள் கிடைக்கும் வகையிலான கல்வி முறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை இளைஞர் சமூகத்தின் தொழில்நுட்பத் திறன்களை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லும் ‘உலக ரோபோ ஒலிம்பியாட்’ தேசியப் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இம்முறை போட்டிகளில் நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளிலிருந்து 66 அணிகள் பங்கேற்றன. இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்கு வளர்ச்சியாகும் என பிரதமரின் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

“ரோபோ தொழில்நுட்பம் மற்றும் கலாசாரத்தின் சந்திப்பு” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்தப் போட்டியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டதுடன், உள்நாட்டுக் கலாசாரம் மற்றும் நவீன பொறியியல் துறைகளை ஒன்றிணைத்த பல படைப்புகளை முன்வைத்திருந்தனர்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய:”வேகமாக மாறிவரும் இன்றைய உலகில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் கவனம் செலுத்துவது ஒரு நாட்டின் தேசிய முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

உலக ரோபோ ஒலிம்பியாட் போன்ற வாய்ப்புகள் ஊடாக எமது இளைஞர் சமூகத்திற்கு தர்க்கரீதியான சிந்தனை, புத்தாக்கம் மற்றும் ஒத்துழைப்பு போன்ற அத்தியாவசிய திறன்களைப் பயிற்றுவிப்பதற்கான சிறந்த சந்தர்ப்பம் கிடைக்கிறது.

“2025 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச ரோபோ ஒலிம்பியாட் போட்டியில் இலங்கை முதன்முறையாக இரண்டு அணிகளைப் பங்கேற்கச் செய்ததன் மூலம் இந்நாட்டு பிள்ளைகளுக்கு மிக முக்கியமான அனுபவம் கிடைத்திருந்தது.

நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பிள்ளைகளுக்கும் இவ்வாறான தொழில்நுட்ப வாய்ப்புகள் கிடைக்கும் கல்வி முறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்கு என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் வலியுறுத்தினார்.

Related Articles

Back to top button