இன்று வானில் நிகழப்போகும் அரிய காட்சி-ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கும் 6 கோள்கள்!

இன்று மாலை வானில் அரிய விண்வெளி நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளது.
புதன், வெள்ளி, சனி, நெப்டியூன், யுரேனஸ் மற்றும் வியாழன் ஆகிய ஆறு கோள்களும் வானில் அணிவகுத்து நிலைகொள்ளும் காட்சி தென்படும்.
வளர்பிறை நிலவும் இவற்றுடன் இணைந்து காட்சியளிக்கும்.இது மாலை சுமார் 6:28 மணிக்கு சூரியன் மறைந்த பின்னர் உடனடியாக மேற்கு அடிவானத்தில் முதலில் பிரகாசமான ஒளிப்புள்ளியாக வெள்ளி கோள் தென்படும்.
இருட்டு அதிகரிக்கும்போது சனி கோள் மேலே காட்சி தரும்.சனிக்கு அருகே நெப்டியூன் இருக்கும்; ஆனால் அதை வெறும் கண்களால் காண முடியாது தொலைநோக்கி தேவை.
புதன் கோள் அடிவானத்திற்கு மிக அருகே சில நிமிடங்கள் மட்டுமே தென்படும்.இவை அனைத்தும் சுமார் 6:45 மணிக்குள் நடைபெறும்.
6:55 மணிக்குள் புதன், வெள்ளி மறைந்துவிடும்; 7:20 மணியளவில் சனியும் மறையும்.அடிவானக் காட்சியைத் தொடர்ந்து தலையை உயர்த்திப் பார்த்தால் நிலவும் அதன் அருகே வியாழன் கோளும் தென்படும்.நிலவின் 92% பகுதி ஒளிர்வதால் அது மிகவும் பிரகாசமாக இருக்கும்.
கோள்கள் அணிவகுப்பு என்பது உண்மையில் கோள்கள் ஒரே நேர்கோட்டில் வருவது அல்ல.
பூமியிலிருந்து பார்க்கும் போது அவை அருகருகே இருப்பது போலத் தோன்றும் காட்சித் தோற்றமே அது.சூரியனை கோள்கள் வெவ்வேறு வேகத்தில் சுற்றுவதால், சில சமயம் ஒன்று மற்றொன்றை “முந்திச் செல்லும்” நிலையில் இருக்கும்.
அந்த தருணத்தில் அவை வானில் ஒரே கோட்டில் இருப்பது போலத் தோன்றும்.
இந்த அரிய நிகழ்வை காண, மேற்கு அடிவானம் தெளிவாகத் தெரிவதற்கான உயரமான இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.




