புதுடில்லியில் அநுர – மோடி இன்று சந்திப்பு

AI Impact 2026′ மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான தீர்க்கமான சந்திப்பு இன்று நண்பகல் நடைபெற்றது.
புதுடில்லியிலுள்ள ஹைதராபாத் மாளிகையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த ஐக்கியத்துடன் வரவேற்றார்.
தனது அழைப்பை ஏற்று சர்வதேச செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பங்கேற்றமைக்காக ஜனாதிபதிக்கு அநுரவுக்குப் பிரதமர் மோடி இதன்போது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இரு தலைவர்களுக்கும் இடையிலான சுமுகமான கலந்துரையாடலைத் தொடர்ந்து, இரு நாட்டுத் தூதுக்குழுவினரும் பங்கேற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.
இதன்போது இலங்கை – இந்தியா இடையிலான வரலாற்று ரீதியான உறவுகளைப் புதிய தளத்திற்கு இட்டுச் செல்வது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக பின்வரும் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த இணக்கம் காணப்பட்டது:
* இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத் தடைகளை நீக்கி, முதலீடுகளை அதிகரித்தல்.
* செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளைப் பகிர்ந்து கொள்ளுதல்.
* நீண்டகாலமாகத் தொடரும் இரு நாட்டு கலாச்சார மற்றும் சமூகத் தொடர்புகளை மேலும் பலப்படுத்துதல்.இலங்கையை அண்மையில் தாக்கிய ‘டித்வா’ சூறாவளி அனர்த்தத்தின் போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா வழங்கிய அவசர மனிதாபிமான உதவிகள் மற்றும் விசேட ஒத்துழைப்புகளுக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இந்தியப் பிரதமருக்குத் தனது விசேட நன்றியைத் தெரிவித்தார்.
அயல்நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் இந்தியாவின் ‘Neighborhood First’ கொள்கையின் கீழ், இலங்கையின் இறையாண்மை மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்குத் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இதன்போது உறுதியளித்தார்.




