Sri Lanka News

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 89 குற்றவாளிகளை நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை

இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டு, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை (Red Notice) பிறப்பிக்கப்பட்டு, வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள மேலும் 89 குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்குப் பொலிஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் மற்றும் ஷார்ஜா பகுதிகளில் பல்வேறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 குற்றவாளிகள் நேற்று (27) இரவு புலனாய்வுப் பிரிவின் விசேட நடவடிக்கை மூலம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்களில் மூவர், திட்டமிட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையவர்களோடு அங்கிருந்தவாறே இலங்கையில் குற்றச் செயல்களை இயக்கியவர்களாவர்.

இருவர் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என்றும், ஏனைய மூவரும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த 22ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 19 ஆண்கள், 2 பெண்கள் உட்பட 21 சந்தேகநபர்கள் அழைத்து வரப்பட்டு, தற்போது விசேட பிரிவுகளின் கீழ் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

2024, 2025 மற்றும் 2026 ஆகிய மூன்று வருடங்களில் மட்டும், சர்வதேச சிவப்பு எச்சரிக்கை மூலம் 32 சந்தேகநபர்களும், பல்வேறு நாடுகளுடன் தொடர்புகொண்டு குற்றங்களைச் செய்த மேலும் 70 சந்தேகநபர்களும் இதுவரை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

நாட்டில் குற்றங்களைச் செய்துவிட்டு வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்து கொண்டு, குற்றச் செயல்களை இயக்கும் எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என்றும், எஞ்சியுள்ள 89 பேரையும் விரைவில் இலங்கைக்கு அழைத்து வரத் தயாராக இருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button