Sri Lanka News

வித்தியா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த 46 வயதுடைய அவர் நேற்று (24) இரவு சிறைச்சாலைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா 2015-ஆம் ஆண்டு மே மாதம் 13-ஆம் திகதி கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

குறித்த வழக்கின் குற்றவாளிகளாக காணப்பட்ட 7 பேருக்கும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகிய நீதிபதிகள் குழாமினால் 2017 செப்டம்பர் 27ஆம் திகதி மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

மரண தண்டனையிலிருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி பிரதிவாதிகளால், உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மேன்முறையீடு தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் பிரதிவாதிகளில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் விதித்த மரண தண்டனையிலிருந்து தம்மை விடுதலை செய்யுமாறு சுவிஸ் குமார் உள்ளிட்ட 4 பிரதிவாதிகள் தாக்கல் செய்திருந்த மேன்முறையீடுகளை உயர் நீதிமன்றம் கடந்த 6 ஆம் திகதி நிராகரித்தது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் ஏற்கனவே மேல் நீதிமன்றம் விதித்த மரணதண்டனையை உறுதிசெய்து அன்றைய தினம் தீர்ப்பு வழங்கியது.

வழக்கின் ஏனைய 2 பிரதிவாதிகளின் தண்டனையை நீக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதியில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 18 வயது மாணவியான சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் பிரதான குற்றவாளியான சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button