Sri Lanka News

சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய “சிறந்த வாழ்வுக்கான கௌரவிப்பு விழா – 2026”

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் “சிறந்த வாழ்வுக்கான கௌரவிப்பு விழா – 2026” நிகழ்வு இன்று (24) சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் மிகவும் விமர்சையாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.

கலாசார மற்றும் திறன் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு பல்வேறு பயிற்சிப் பாடநெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்த மாணவர்களுக்கான பாராட்டு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வாக அமைந்த இவ்விழாவில், தேசிய பிரதீபா போட்டிகள் மற்றும் மாகாண மட்டங்களில் சாதனை படைத்த பலரும் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்விற்கு சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தின் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி. நௌசாத் தலைமை தாங்கினார். சாய்ந்தமருது கலாசார அதிகார சபை தலைவர் கலைஞர் அஸ்வான் எஸ். மௌலானாவின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை கரையோர மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு சபை உறுப்பினருமான அதம்பாவா அபூபக்கர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

மேலும் கௌரவ அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். அஸீக் கலந்து கொண்டதுடன், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் டி.எம். ரின்சான் கல்முனை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம். பழீல், அக்கரைப்பற்று, மருதமுனை கலாச்சார நிலையப் பொறுப்பதிகாரிகள், பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் ரஸ்மி மூஸா உள்ளிட்ட பலரும் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வை சாய்ந்தமருது கலாசார அதிகார சபை பிரதித்தலைவர் நூருல் ஹுதா உமர் நெறிப்படுத்தினார். இவ்விழாவின் சிறப்பம்சமாக தேசிய பிரதீபா போட்டியில் வெற்றியீட்டிய கலைஞர்கள், மாகாண மட்டத்தில் சாதனை படைத்த இளம் கலைஞர்கள், கலாசார துறையில் நீண்டகால சேவையாற்றி வரும் பிரதேசத்தின் மூத்த கலைஞர்களான பல்வேறு கலை மற்றும் சமூக துறைகளில் பங்களிப்பு செய்த வளவாளர்கள் ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

பாரம்பரிய கலை, பண்பாடு மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் பாடல்கள், நடனங்கள், கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வு சாய்ந்தமருது பிரதேசத்தின் கலை, கலாசார மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளுக்கு புதிய உற்சாகத்தை அளிக்கும் வகையில் அமைந்ததாக கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

இளம் தலைமுறையினரின் திறமைகளை வெளிக்கொணர்வதோடு, பாரம்பரிய கலைகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் பணியில் இவ்வாறான நிகழ்வுகள் முக்கிய பங்காற்றுகின்றன என உரையாற்றிய அதிதிகள் கருத்து வெளியிட்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button