முயற்சி செய்தால் முதலிடம் கூட வர முடியும்; முல்லைத்தீவு பௌதீக விஞ்ஞான பிரிவில் இரண்டாம் நிலை பெற்ற மாணவி!

“எல்லோராலும் முயற்சி செய்தால் முதலிடம் கூட வர முடியும்” என ஏனைய மாணவர்களுக்கு ஊக்கமளித்த பௌதீக விஞ்ஞான பிரிவில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் இரண்டாம் நிலை பெற்ற விசுவமடு மகாவித்தியாலய மாணவி யோ.கனிவிழி தெரிவித்துள்ளார்.
அம் மாணவி மேலும் தெரிவிக்கையில்,பௌதீக விஞ்ஞான பிரிவில் நான் 2 ஏ, பி சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் நிலையை பெற்றுள்ளேன்.
நான் இந்த நிலையை அடைவதற்கு உதவிய குடும்பத்தினருக்கும், நான் இந்த சித்தியைப் பெற வழிப்படுத்திய பாடசாலை ஆசிரியர்கள், தனியார் கல்வி நிலைய ஆசிரியர்கள் , சக நண்பர்கள் ஆகியோருக்கும் எனது நன்றிகள்.
சிறு வயதில் படிக்கும் போதே இத்துறையை தான் விரும்பி படிக்க ஆசைப்பட்டு ஆர்வத்துடன் கல்வி பயின்று வந்தேன். ஆனால் எமது பிரதேசத்தை பொறுத்தவரையில் இந்த பாடங்களை தெரிவு செய்வதில் மாணவர்கள் தயக்கம் காட்டுவார்கள்.
ஆயினும் எனக்கு சிறு வயதில் இருந்த ஆர்வமும் ,கல்வி நிலைய ஆசிரியர்களின் தூண்டுதலாலும், பெற்றோரின் ஒத்துழைப்பாலுமே இந்த பாடத்தினை தெரிவு செய்திருந்தேன். உயர்தரம் கற்கும் போது இந்த நிலைக்கு வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கவில்லை.
எனக்கு என்ன பெறுபேறு கிடைத்தாலும் பரவாயில்லை. என்றுதான் கல்வியை ஆரம்பித்திருந்தேன்.
இருப்பினும் சில நாட்கள் கடந்த பின்னர் என்னால் முடியும் என்ற நம்பிக்கை ஆசிரியர்களால் கிடைத்ததனால் இந்த நிலைக்கு வரக்கூடியதாக இருந்தது.உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.
நீங்களும் முயற்சி செய்து கடினப்பட்டு படிப்பீர்களாக இருந்தால் உங்களாலும் இந்த நிலையை அல்ல.
முதலாவது நிலையை கூட நீங்கள் அடையக்கூடியதாக இருக்கும் என தெரிவித்தார்.




