சீரற்ற வானிலையால் 28,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு – பல வீடுகள் சேதம்

சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில் 28,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அந்நிலையம் விடுத்துள்ள புதிய அறிக்கையின்படி, அனர்த்தங்களினால் 7,482 குடும்பங்களைச் சேர்ந்த 28,933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.
அங்கு 3,950 குடும்பங்களைச் சேர்ந்த 15,313 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு மரணமும் பதிவாகியுள்ளது.இதற்கு மேலதிகமாக, புத்தளம் மாவட்டத்தில் 1,219 குடும்பங்களைச் சேர்ந்த 4,265 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 1,051 குடும்பங்களைச் சேர்ந்த 4,566 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 1,204 குடும்பங்களைச் சேர்ந்த 4,558 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 141 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 20 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேரும், காலி மாவட்டத்தில் 09 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரும் மற்றும் வவுனியா மாவட்டத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த அனர்த்த நிலைமை காரணமாக 02 வீடுகள் முழுமையாகவும், 836 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றில் அதிகளவிலான வீட்டுச் சேதங்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளன.
அந்த மாவட்டத்தில் 02 வீடுகள் முழுமையாகவும், 530 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 08 மாவட்டங்களைச் சேர்ந்த 34 பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்தே இத்தரவுகள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.




