Sri Lanka News

களனி, களு மற்றும் அத்தனகலு ஓயாவை அண்மித்துள்ள மக்களுக்கானஅறிவிப்பு

அத்தனகலு ஓயாவைச் சூழவுள்ள பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த சிறியளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு, அடுத்த 24 மணித்தியாலங்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவான மழைவீழ்ச்சியைக் கருத்திற் கொள்ளும்போது, அதிகளவிலான மழைவீழ்ச்சி களனி கங்கை ஆற்றுப் படுகையிலேயே பதிவாகியுள்ளதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் களனி கங்கை, களு கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆற்றுப் படுகையை சூழவுள்ள இடங்களில் 50 முதல் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஆறுகளின் உயர்வடைந்த நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருவதுடன், அதில் பெரியளவிலான அதிகரிப்பு எதுவும் காட்டவில்லை என நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

களனி கங்கையின் நாகலகம வீதிப் பகுதியின் நீர்மட்டமும் படிப்படியாகக் குறைந்து வருவதாகவும், அதில் மேலும் அதிகரிப்பு எதுவும் இல்லை எனவும் அத்திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் எல்லகாவ மற்றும் மில்லகந்த ஆகிய இடங்களின் நீர்மட்டங்களும் படிப்படியாகக் குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மேலும் அதிகளவிலான மழைவீழ்ச்சி ஏற்படும் பட்சத்தில், களனி கங்கை, களு கங்கை மற்றும் அத்தனகலு ஓயாவைச் சூழவுள்ள பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவக்கூடும் என்பதால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button