Sri Lanka News

அரசு நிறுவனங்களில் திடக்கழிவு முகாமை தொடர்பில் புதிய சுற்றறிக்கை

அரசு நிறுவனங்களின் திடக்கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்காக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதான செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் விதிகளுக்கு உட்பட்ட சபைகளின் தலைவர்களுக்கு இந்தச் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சுற்றறிக்கையின்படி, எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி முதல் அனைத்து அரசு நிறுவனங்களிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களைக் கொள்வனவு செய்வதும், பயன்படுத்துவதும் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும்.

இதற்கு மேலதிகமாக, அரசு நிறுவனங்களுக்குள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிக்கப்படுவதைத் தடுப்பதற்கு அனைத்து நிறுவனத் தலைவர்களும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புதிய சுற்றறிக்கைக்கு மேலதிகமாக, கடந்த வருடத்தின் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி வெளியிடப்பட்ட பொது நிர்வாகச் சுற்றறிக்கையில் உள்ள விதிகளும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, அனைத்து அரசு நிறுவனங்களும் “3R” (Three R) கருத்தாக்கத்திற்கு இணங்கச் செயல்பட வேண்டும். அதாவது கழிவுகளைக் குறைத்தல் (Reduce), மீண்டும் பயன்படுத்துதல் (Reuse) மற்றும் மறுசுழற்சி செய்தல் (Recycle) ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.

இந்தச் சுற்றறிக்கையானது சுற்றாடல் அமைச்சின் உடன்பாட்டுடன் வெளியிடப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button