News

மாலைதீவு ஜனாதிபதி இன்று இலங்கைக்கு விஜயம்! கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடு

மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.2023ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர், மொஹமட் முயிசு இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் வருகை தரும் மாலைதீவு ஜனாதிபதி, எதிர்வரும் 06ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்.

இந்த விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி மற்றும் அவரது தூதுக்குழுவினரின் பாதுகாப்பான மற்றும் தடையற்ற பயணத்திற்காக சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி இன்று, ஜனாதிபதியின் வாகனத் தொடரணி கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை ஊடாக கொழும்பை வந்தடையும்.ஒருகொடவத்தை சந்தி, பேஸ்லைன் வீதி, பொரளை சந்தி, டி.எஸ்.

சேனாநாயக்க சந்தி, ஹோர்டன் பிளேஸ், தாமரைத் தடாக சுற்றுவட்டம், ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, நூலக சந்தி, பிளவர் வீதி சந்தி, லிபர்ட்டி சுற்றுவட்டம், சென். மைக்கெல்ஸ் வீதி, காலி வீதி, காலிமுகத்திடல் சுற்றுவட்டம் மற்றும் யோர்க் வீதி ஆகிய பகுதிகள் ஊடாக வாகனத் தொடரணி பயணிக்கவுள்ளது.

மாலைத்தீவு ஜனாதிபதி பயணம் செய்யும் வேளையில், அப்பகுதிகளில் போக்குவரத்து தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டு, வாகனங்கள் மாற்று வழிகளுக்குத் திருப்பிவிடப்படும்.போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயணத் தாமதங்களைத் தவிர்க்கவும் வாகன ஓட்டிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button