19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் கைதான விவகாரம் – இரகசிய காணொளிகள் குறித்து தீவிர விசாரணை!

இலங்கையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மறுசீரமைப்பு குழு, கிரிக்கெட்டில் ஒழுக்கங்கள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கொழும்பு- நாரஹன்பிட்டியவில் உள்ள விருந்தகம் ஒன்றில் தங்கியிருந்த இலங்கை 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் இருவர், பெண் விருந்தினர்களை இரகசியமாகப் படம்பிடித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையிலேயே, ஒழுக்கங்கள் தொடர்பான விடயங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த இருவரும் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, தலா 500,000 ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், அவர்கள் காட்சிப்படுத்திய காணொளிகள் இணையத்தில் பகிரப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.




