Sri Lanka News

50,000 ரூபாவிற்கு விற்கப்பட்ட ஒன்றரை வயது பெண் குழந்தை! கிளிநொச்சியில் அதிர்ச்சிக் கடத்தல்

கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புன்னை நீராவி கிராம அலுவலர் பிரிவில் இன்றைய தினம் (25) ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்றை 50 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்த தாய் மற்றும் தந்தை எனக் கூறப்படும் ஆண் மற்றும் குழந்தையை வாங்கியவர் என மூவரும் அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு தருமபுரம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் மாதகல் பகுதியைச் சேர்ந்த குறித்த பெண், மற்றும் அவருடன் துணைக்கு வந்த ஆண் ஆகியோர் புன்னை நீராவி கிராம அலுவலர் பிரிவில் உள்ள பெண்ணை சந்திக்க வந்துள்ளனர்.

அங்கு தனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் அதில் ஒரு குழந்தையை வளர்க்க முடியாத நிலையில் விற்பனை செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் போலியான ஆவணங்களை தமக்கு ஏற்றவாறு இரு பகுதியினரும் தயார் செய்து குழந்தையை விற்றுள்ளனர்.

விற்றதற்கு சாட்சியாக புகைப்படங்களும் எடுத்துள்ளனர். குறித்த சம்பவத்தை அறிந்த ஊர்மக்கள் இவர்களை மடக்கிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மாதகலிலிருந்து சென்ற குறித்த பெண்ணுக்கு தற்பொழுது இரண்டு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்றும் உள்ள நிலையில் தற்போது விற்பனை செய்யப்பட்ட குழந்தை இவர்களுடையதா அல்லது வேறு நபர்களுடைய குழந்தையா என மேலதிக விசாரணைகளை தர்மபுர பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் குறித்த சம்பவம் தொடர்பாக குழந்தையை விற்பனை செய்த தாய் மற்றும் விற்பனை செய்வதற்கு உடந்தையாக இருந்த ஆண் மற்றும் குழந்தையை பணம் கொடுத்து பெற்ற பெண் என மூன்று பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தையை பெற்றுக்கொண்ட பெண் இன்று இரவு குழந்தையுடன் கொழும்புக்கு புறப்படத்தயாரான நிலையில் இருந்ததாக விசாரணைகளில் தெரிய வந்த நிலையில், குழந்தைகள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா என்ற கோணத்தில் விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

மேலும் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் குழந்தை தற்பொழுது பொலிசாரின் பராமரிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button